கர்நாடகாவில், பள்ளி நாடகம் ஒன்றில், பிரதமர் மோடியை அவதுாறாக சித்தரித்த குற்றச்சாட்டில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, நாடகத்தில் நடித்த மாணவரின் தாய் ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், ஜன., 21ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை அவதுாறாக சித்தரித்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலரான, நீலேஷ் ரக் ஷயால், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன் பள்ளி மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
நேற்று, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, நாடகத்தில் நடித்த மாணவரின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி நாடகத்தின் அசல் 'ஸ்கிரிப்டில்' மோடியை அவதுாறாக பேசும் வசனங்கள் இல்லை. ஆனால், நாடகத்தில் நடித்த, ஆறாம் வகுப்பு மாணவனின் தாய், அவதுாறு வசனங்களை சேர்த்துள்ளார். ஒத்திகையின்போது, இந்த மாற்றத்திற்கு, தலைமை ஆசிரியையும் ஒப்புதல் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவர் என தவறான செய்தியை நாடகம் மூலம் பரப்பியுள்ளனர்.அத்துடன், இந்த நாடகத்தை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இதனால், தலைமை ஆசிரியை, மாணவரின் தாய் ஆகியோர், தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments