பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது. மன ரீதியான பல மாற்றங்கள் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல ஊர்களில் நீலத்திமிங்கல விளையாட்டுக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், உயிரை விட்டவர்கள் சென்னையில் தொடர்வண்டியில் பட்டாக்கத்தியுடன் விபரீத விளையாட்டு என கேள்விப்படும் செய்திகளெல்லாம் நம் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. தேர்வு எழுதி தோல்வியடைந்தால் உடனே மனம் உடைந்து தற்கொலை வரை செல்லும் மாணவர்கள், தன் விருப்பத்துக்கு மாறாக எது நடந்தாலும் எதிர்மறையாகச் சிந்திக்கும் மாணவர்கள், கல்வி நிலையங்களுக்குள்ளேயே குழுக்களாகப் பிரிந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் எனப் பல தகவல்கள் நம் கவனத்துக்கு வரும்போது வேதனையைத்தான் உண்டாக்குகிறது. தவறான பாதையில் தடம் மாறும் மாணவர்கள் தடுக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும்.
வசதி வாய்ப்புகள் இல்லாத சூழலிலும் தெரு விளக்கின் ஒளியில் படித்து நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை அடைந்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் செய்தியாக வந்த காலம் போய் ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் ஆயுதங்களோடு வன்முறையில் இறங்கும் மாணவர்கள் பற்றிய அவ்வப்போதைய செய்திகள் கவலைக்குரியது.
நம் கல்வியும் சமூகமும் தற்கால மாணவ சமூகத்திற்குக் கற்றுத்தந்ததுதான் என்ன? என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு இதுதானா? சென்ற நூற்றாண்டின் இறுதியில் இளைஞர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படலாம். இணையமோ கணினியோ கைபேசியோ கேபிள் தொலைக்காட்சிகளோ இல்லாத காலம் அது. இளைஞர்கள் பெற்றோர்களோடும், உறவுகளோடும் நண்பர்களோடும் நேருக்குநேர் அளவளாவிய காலம் அது. தனக்கு ஒரு பிரச்னை என்றால் மேற்கண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளி/கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்வார்கள். அந்தி சாயும் நேரத்தில் நண்பர்களோடு வீதிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வீடு திரும்புவர். அந்த விளையாட்டுகள் அனைத்தும் அவர்கள் சமூகவயமாவதற்கு ஆயத்தப்படுத்தின.
விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வதன் மூலம் அந்த ஊர் பண்பாடு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். எப்போதாவது நண்பர்களுடனோ பெற்றோர்களுடனோ திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்த்தனர். இவை ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தை மறைமுகமாகக் கற்றுத்தந்தன. கூடி வாழும் மனப்பக்குவத்தை, சமூகக் கடமைகளை அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்து செயல்பட்டனர். அப்படியென்றால் அக்கால மாணவர்களிடையே எந்த சிக்கல்களும் இல்லை என்று கூறிவிட இயலாது. ஒன்றிரண்டு என்று பிரச்னைகள் இருந்திருக்கலாம். இப்படி நாம் கவலை கொள்ளுமளவுக்கு இல்லை என்பது உறுதி.
ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கால மாணவ சமூகத்தைப் பயனுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க முடியும். அக்கால ஆசிரியர்களைப்போல் தற்கால ஆசிரியர்கள் செயல்பட இயலாதபடி சில கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டைகளாக உள்ளன.
ஆசிரியர்கள் பங்கு
மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. பாடத்தைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் தானே முன்மாதிரியாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலை அவர்களோடு உரையாடி அறிந்துகொண்டு அவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற அளவு நிறைவுசெய்வதோடு நல்ல நண்பராக அவனோடு பழகினால் நமக்கு ஒரு பிரச்னை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம் என்னும் மன நிலையை ஏற்படுத்திவிடவேண்டும். அதன்மூலம் அந்த மாணவன் நம்மைப் பின்பற்றத் தொடங்குவான்.
பெற்றோர் பங்கு
தன் குழந்தையின் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும். தன் குழந்தைகளைப்பற்றி முதலில் நன்கு புரிந்துகொண்டு அவர்களிடம் நட்போடு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றோர்கள் பெறுவது அவசியம். பிறகு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வழிவகை செய்திடல் அவசியம். அளவோடு செல்லம் கொடுப்பது அவசியம்.
தேவைப்படும் நேரத்தில் கண்டிக்க வேண்டும். ஒரே பிள்ளையாக இருக்கிறதே ஏதாவது செய்துகொள்ளுமோ என்ற அச்சத்தைக் கைவிடவேண்டும். நட்பும் கண்டிப்பும் இரு கண்களைப் போன்றது என்பதை அவர்களுக்கு நம் செயல்பாடுகள் மூலம் உணர்த்த வேண்டும்.
பெற்றோர்கள் தன் மகன் படிக்கும் பள்ளி/கல்லூரிக்கு அவ்வப்போது சென்று பார்த்து வருவதோடு ஆசிரியர்களைச் சந்தித்து தன் மகன்/மகளைப் பற்றி உரையாடவேண்டும். நல்ல நூல்கள், திரைப்படங்களைப்பற்றி தங்களின் குழந்தைகளோடு உரையாடி அவர்களின் ரசனையை மேம்படுத்தவேண்டும். மரபுவழி விளையாட்டுகளை விளையாடப் பழக்கவேண்டும். அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தல், கூடிவாழ்தல், தலைமைப் பண்பு ஆகியவற்றை மறைமுகமாகக் கற்றுத்தரும் வல்லமை கொண்டவை.
மாணவர் பங்கு
பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மனம்விட்டுப் பழகவேண்டும். நம் முன்னோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பிடியிலேயே சிக்கிக்கிடக்காமல் நண்பர்
களோடு விளையாடப் பழகுதல் நலம். பெரியோர்களை மதித்து நடந்துகொள்வதை ஆசிரியர் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நற்பண்புகளை பின்பற்றிட முயலவேண்டும்.மூவரும் ஒருங்கிணைந்து செயல்படு
வதன் மூலம் மட்டுமே சிறந்த நற்பண்புகள் நிறைந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கமுடியும்.


0 Comments